Dec 6, 2024 - 12:42 PM -
0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (05) உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 4 ஆம் திகதி காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களும், இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை நேற்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 14 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
--