Dec 7, 2024 - 06:53 PM -
0
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த குற்றப் பிரேரணை இன்று (07) அந்நாட்டு பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி திடீரென இராணுவச் சட்டத்தை விதித்த சம்பவத்தின் அடிப்படையில் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக தென்கொரிய எதிர்க்கட்சிகள் பதவி நீக்கம் கொண்டு வந்துள்ளன.
இன்று பிற்பகல் தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு அமைவாக பதவி நீக்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும், அதன்படி, 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
எதிர்க்கட்சியில் 192 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், பதவி நீக்கத்தில் வெற்றி பெற அவர்களுக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.
எனினும், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்தனர்.
இதில் ஒரு சிலர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு திரும்பினர், வாக்கெடுப்பின் போது அக்கட்சியைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சபையில் இருந்தனர்.
அதன்படி, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
குற்றப் பிரேரணை தொடர்பான இரண்டாவது வாக்கெடுப்பு டிசம்பர் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.