Dec 8, 2024 - 06:20 AM -
0
அமெரிக்காவில் கடந்த 5ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு அதிகாரிகளை அவர் நியமித்து வருகிறார். இதன்படி, அமெரிக்காவில் ஜோர்ஜியா மாகாண முன்னாள் செனட் உறுப்பினரான டேவிட் பெர்டியூவை, சீனாவுக்கான அமெரிக்க தூதராக ட்ரம்ப் நியமித்து உள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில், பார்ச்சூன் 500இன் தலைமை செயல் அதிகாரி, 40 வருடம் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டவர், அமெரிக்க செனட்டராக பணியாற்றியவர் டேவிட். சீனாவுடனான நம்முடைய உறவை கட்டியெழுப்ப மதிப்புமிக்க நிபுணத்துவத்துடன் செயல்படுவார்.
சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங்கில் வசித்திருக்கிறார். தொழிலின் பெரும் பகுதியாக ஆசியா மற்றும் சீனாவில் அவர் பணியாற்றி இருக்கிறார் என தெரிவித்து உள்ளார். சீன தலைவர்களுடன் ஆக்கப்பூர்வ செயல்பாட்டுக்கான உறவை ஏற்படுத்தவும், அந்த பகுதியில் அமைதியை பராமரிப்பதற்கான என்னுடைய செயல் திட்டம் அமல்படுத்தப்படவும் துணை புரிவார் என்றும் ட்ரம்ப் அதில் தெரிவித்து இருக்கிறார்.