Dec 10, 2024 - 11:24 AM -
0
வவுனியாவில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டதையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் நேற்று (09) மதியம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்த வீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். இதன்போது அவர் பொலிஸாருடன் செல்ல மறுத்ததால் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
இருந்தபோதும், கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். குறித்த நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட போது அந்த பகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்ததுடன், அப் பகுதியில் தமது கடமைக்கு குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
--