Dec 10, 2024 - 03:23 PM -
0
கடை ஒன்றின் கட்டுமான வேலைத்தளத்தில் இடம்பெற்ற அனர்த்தம் ஒன்றில் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடை தொகுதியில் வேலையில் ஈடுபட்டவர்கள் சிக்கிக் கொண்ட அனர்த்தம் ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன் பின்னர் அவர்களின் கட்டளையின் பிரகாரம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணை நடவடிக்கையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் மூச்சு திணரல் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக மரணம் இடம்பெற்றதா என்பதை கண்டறிய கொழும்பில் உள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சடலத்தின் சில பகுதிகள் சான்றிற்காக அனுப்பி வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் 12 நாள் ஆண் குழந்தை ஒன்றின் தந்தையான சாய்ந்தமருது பிரிவு 16 அஹமட் வீதியை சேர்ந்த அப்துல் மஜீட் மஹ்தி அஹாஸ் அஹமட் (வயது-29) என்பவர் ஓடாவி வேலைக்காக சென்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட குழியில் தவறி விழுந்து ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
--