வடக்கு
காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள் ஆரம்பம்

Dec 15, 2024 - 03:39 PM -

0

 காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள் ஆரம்பம்

காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

இந்தியாவில் சுபம் குறூப் ஒப் கம்பனிஸ் பல்வேறு வியாபார நிறுவனங்களை உள்ளடக்கியதொன்றாகும். குறிப்பாக, தனிமனிதனின் தலைமைத்துவத்தில் 500 இற்கும் மேற்பட்ட பாரவூர்தி போக்குவரத்து சேவையை வழங்குவதாக இருக்கின்றது.

 

அத்துடன் எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படகுசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

 

இம்மாதம் 23 ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்குவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம்.

 

மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் மீள் ஆரம்பம்,

 

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டனத்துக்கும் இடையிலான படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகின்றது.

 

நாங்கள் படகுசேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது.

 

மீள படகுசேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம்.

தற்போது இருவழிக் கட்டணமாக 9,700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதனை நாம் 8,500 இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும்.

 

மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும் அதேநேரம், நாகைப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்வதில் நெருக்கடிகள் இருந்தன.

 

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம்.

 

அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பானங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம். மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது.

 

சுபம் நிறுவனம் நேரடியாகவே படகுசேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுக்கள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்திய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  sailsubham.com என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அந்த இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட  மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது. இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50,000 வரையில் இருக்கின்றது. இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

வளங்கள் நிறைந்த வடக்கு மாகாணம்,

 

வடக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. பிரசித்திபெற்ற சமயத்தலங்கள், வரலாற்று இடங்கள், கலாசார முக்கியத்துவ பகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புக்களை கொண்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளை இந்தப்பகுதிகள் மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன என்பதை எம்மால் உறுதியாகக்கூற முடிகின்றது. ஆகவே குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகுசேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05