Dec 21, 2024 - 07:27 PM -
0
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் மனம்விட்டு பேசும்படி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. எடிட்டர் மோகனின் இளைய மகனான ரவி ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என தொடர் வெற்றிகளை குவித்தார் ஜெயம் ரவி.
அதன் பிறகு பேராண்மை என்ற திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து தனி ஒருவன், அடங்கமாறு என தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்து ஆக்ஷன் ஹீரோவாகவும் வலம் வந்துகொண்டு இருக்கின்றார் ஜெயம் ரவி. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார். இது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.
இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என அனைவரும் கூறி வந்தனர். இந்நிலையில் தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரையும் மனம்விட்டு பேசும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.