Dec 24, 2024 - 11:14 AM -
0
கடந்த 14ஆம் திகதி மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதன்படி கடந்த 19ஆம் திகதி அந்தப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் அதற்கு உதவிய சந்தேக நபரையும் கைது செய்த நிலையில், கடந்த 22ஆம் திகதி மேலும் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் நேற்று (23) மாலை மீகொடை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொடை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் 26 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குற்றச்செயலுக்கு உறுதுணையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீகொடை கறுவாத்தோட்டம் வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 mm துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரும், மீகொடை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.