Dec 29, 2024 - 07:30 AM -
0
தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் உட்பட 181 பேரை ஏற்றிக் கொண்டு, இன்று (29) விமானம் ஒன்று தென்கொரியா புறப்பட்டது.
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமான நிலையம் சியோலுக்கு தெற்கே 300 கிலோமீற்றர் தொலைவிலும், வடகொரிய எல்லையில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியது. மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து வந்த ஜெரு ஏர் பிளைட் ( Jeru Air flight -2216) என்ற விமானம் தான் விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் தான் கசகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், 38 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் மீண்டும் பெரிய அளவிலான விமான விபத்து நடைபெற்றுள்ளது.