Jan 6, 2025 - 10:39 AM -
0
அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்திதுள்ள பனிப்புயல் அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என அந்நாட்டின் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனிப்புயலுடன் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை ஒரு தசாப்தத்திற்கு பின்னர் பதிவாகியுள்ள கடும் பனிப்பொழிவாக இருக்கலாம் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றர்.
இதன் காரணமாக 60 மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பனிப்புயல் அபாயம் காரணமாக,கென்டக்கி, வேர்ஜீனியா, மேற்கு வேர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவின் பல பகுதிகள் குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 11 பாகை செல்சியஸை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தின் பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மென்செஸ்டர், பெர்மிங்காம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் சுமார் 25 செ.மீ பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஜேர்மனியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.