Jan 10, 2025 - 10:06 AM -
0
வெலிகமையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹநெவிய வீதியில் பயணித்த ஐந்து பேரை குறிவைத்து, கடந்த 4ஆம் திகதி T56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (09) மாலை மாத்தறை பிரிவு குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெலியத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியதில், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்வதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரை இவர் ஓட்டிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும், பெண்ணொருவரும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.