Jan 16, 2025 - 07:21 AM -
0
கம்பளை, தவுலகல பகுதியில் வேன் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று (15) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சிறுமியை கடந்த 11 ஆம் திகதி வேனில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது.
அதன்படி, தவுலகல பொலிஸ் நிலையமும் சிறப்பு காவல் அதிகாரிகளின் பல குழுக்களும் இணைந்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய விசாரணைகளைத் ஆரம்பித்தன.
இதன் விளைவாக, இந்தக் கடத்தலில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை 13 ஆம் திகதி அம்பாறை நகரில் பொலிஸார் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட சிறுமியும் பாதுகாப்பாக பொலிஸாரினால் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (14) சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
கடத்தலுக்காக சந்தேக நபர்கள் வந்த வேனும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்டபட்ட நிலையில், அதன் ஓட்டுநர் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.
கடத்தப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தவுலகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.