Jan 18, 2025 - 08:05 PM -
0
டி-56 ரக துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி, வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளால் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவிவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டார்.
இதன்போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், கடந்த 14 ஆம் திகதி வெலிகந்த பகுதியில் மற்றொரு சந்தேகநபர், டி-56 ரக துப்பாக்கி, அதே வகையைச் சேர்ந்த ஒரு மெகசின் மற்றும் 18 தோட்டாக்களுடன் கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மேற்படி சந்தேகநபர் தொடர்பாக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரிடமிருந்து தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், மற்றொரு T-56 ரக துப்பாக்கி 200,000 ரூபாவுக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, இன்று (18) வெலிஓயா பகுதிக்குச் சென்று, T-56 ரக துப்பாக்கி, ஒரு தோட்டா உறை மற்றும் 11 தோட்டாக்களுடன் மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெலிகந்த, கலிங்கவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என்றும், அவர் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி வேறு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.