Feb 8, 2025 - 04:18 PM -
0
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர்.
பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம், புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.
நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் சென்றபோது கடும் பனிப்பொழிவு நிலவியது. அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இதில் ஹெலிகாப்டர்கள், ஹெச்-130 ஹெர்குலஸ் விமானம் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
நோம் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்தது.
இந்த நிலையில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அந்த விமானம் அலாஸ்கா கடலில் உறைந்திருந்த பனியில் விழுந்து நொறுங்கி கிடந்தது. அதில் பயணித்த 10 பேரும் பலியாகி இருந்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.