Feb 8, 2025 - 06:05 PM -
0
இளம்பெண்கள் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அதற்காக காது, உதடு அணிகலன்கள் உள்பட அழகுசாதன பொருட்கள் வாங்குவதற்கு அதிக ஆசைப்படுவார்கள். இவ்வாறு உதடு அணிகலன் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண் ஒருவர் அதற்காக தனது தாயின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி ரூ.700 இற்கு விற்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
அங்குள்ள வாங் என்ற பெண் தனது வீட்டில் இருந்த 1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடி) மதிப்பிலான வளையல், நெக்லஸ் மற்றும் ரத்தின கற்கள் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் விசாரணை நடத்திய போது வாங்கின் மகள் லீ தான் அந்த நகைகளை திருடி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் லீயை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, எனக்கு உதடு அணிகலன்கள் வாங்க பணம் தேவைப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த நகைகளை கவரிங் என நினைத்து எடுத்து சென்று அவற்றை ரூ.700 இற்கு விற்று ஒரு ஜோடி உதடு அணிகலன் வாங்கியதாக கூறி உள்ளார். பின்னர் அவர் விற்பனை செய்த கடைக்கு சென்று நகைகளை மீட்டு பொலிஸார் வாங்கிடம் ஒப்படைத்தனர்.