Feb 9, 2025 - 02:47 PM -
0
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3ஆவது சீசன் நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2 ஆம் திகதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது. எலிமின்னேட்டர் 2 சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று (09) நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியின் எஸடரூசியன் 39 ஓட்டங்களையும், பிரேவிஸ் 38 ஓட்டங்களையும், ரிக்கல்டன் 33 ஓட்டங்களையும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவரில் 105 ஓட்டங்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ஏபெல் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
எம்.ஐ.கேப் டவுன் சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

