Feb 14, 2025 - 12:01 PM -
0
மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேழன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஆகஸ்ட் மாதம் வேழன் சுவாமிகள், MK சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கானது நீண்டகாலமாக தவணையிடப்பட்டு வந்த நிலையில் இன்று (14) குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கிளிநொச்சி சட்டத்தரணிகள் பிரதிவாதிகள் சார்பில் ஆயராகினர்.
இந்த நிலையில் குறித்த வழக்கானது நீதவானால் கிடப்பில் போடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வேழன் சுவாமிகள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வழக்கானது இன்றைய தினம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. எத்தனை வழக்குகள் வந்தாலும் இந்த மண் மீதான காதல் மாறாதது. எங்கள் உயிர் இருக்கும் வரை இந்த மண் மீதான காதலும், இன விடுதலையும் அதற்கான போராட்டமும் எப்பொழுதும் தொடரும் என அவர் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி போராட்டத்தில் பங்குபற்றியமைக்கான வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி சட்டத்தரணிகள் எமது சார்பில் ஆயராகி இருந்தார்கள்.
கிட்டத்தட்ட 2 வருடங்களாக இடம்பெற்ற இந்த வழக்கு கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது. எங்களது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் செய்யும் போராட்டங்கள் மீது சிறிலங்கா அரசின் உத்தரவின் பெயரில் சிறிலங்கா பொலிஸார் அவ்வப்போது பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும் மிகவும் கண்டிக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது என தெரிவித்தார்.
--

