Feb 15, 2025 - 12:07 PM -
0
ராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (13) மாலை 4 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தால், எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்பட்டது.
மலைத்தொடரில் உள்ள பாறைகள் தற்போது வெளிப்பட்டுள்ளதால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளது உதய குமார மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதேவேளை, நேற்று (14) இரவு ராவணா எல்ல நீர்வீழ்ச்சியை நோக்கி தீ வேகமாக பரவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நிலவும் வறண்ட வானிலை, காற்று வீசும் சூழ்நிலை மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீ வேகமாகப் பரவியது, இதனால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
இருப்பினும், மூன்று நாட்களாக எரிந்து வரும் தீயை அணைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்த விசாரணையில், இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட தீ விபத்துக்களின் போது விமானப்படை ஹெலிகொப்டரின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த முறை அப்படியான உதவி எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த விடயம் தொடர்பாக "அத தெரண" அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உதய ஹேரத்திடம் வினவியது.
ஹெலிகொப்டர் உதவிக்கு எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும், தீ பரவிய பகுதியில் ஆபத்தான சூழ்நிலை காரணமாக ஹெலிகொப்டர் உதவியைப் பெறுவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

