சினிமா
பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடிய தனுஷ்

Feb 23, 2025 - 05:58 PM -

0

பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடிய தனுஷ்

பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில், பிரபுதேவா அசாத்தியமாக நடனமாடினார். இதில், நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ். ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில், பிரபு தேவா தான் நடித்த, நடன இயக்குனராகப் பணியாற்றிய பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக ப்ளாஷை ஒளிரச் செய்து பிரபுதேவாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 100 நடன கலைஞர்களின் மத்தியில் 'ஊர்வசி ஊர்வசி' பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேசும்போது. "ரசிகர்களின் விசில் சத்தம் தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டு வருகிறது" என்றார். ரௌடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் , காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது. மேலும், நடிகர்கள் பரத், சாந்தனு, லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ப்ரீத்தி அஸ்ராணி, பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05