Feb 24, 2025 - 10:18 AM -
0
ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள கல்லறைகளில் திடீரென தோன்றிய மர்மமான QR குறியீடுகள் கடந்த சில மாதமாக ஒரு பெரும் புதிராக மக்களை பீதியில் ஆழ்த்தின.
கடந்த டிசம்பரில் அங்கு மர்மமான முறையில் ஒட்டப்பட்ட QR குறியீடு ஸ்டிக்கர்களை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது வினோதமான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்த QR குறியீடு ஸ்டிக்கர்கள் முனிச்சில் உள்ள வால்ட்பிரைட்ஹாஃப், சென்ட்லிங்கர் ப்ரீட்ஹாஃப் மற்றும் ப்ரீட்ஹாஃப் சோல்ன் கல்லறைகளில் காணப்பட்டன.
சிலர் இதை ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்ட் என்றும், மற்றவர்கள் இது சில குறும்புக்காரர்களின் செயல் என்றும் கருதினர்.
கல்லறைகள் நிர்வாகத்தின் தலைவரான பெர்ன்ட் ஹோரோஃப், இதை மிகவும் விசித்திரமான சம்பவம் என்றும், இந்த ஸ்டிக்கர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று தனக்குப் புரியவில்லை என்றும் கூறினார்.
கல்லறைகளில் இருந்து ஸ்டிக்கர்களை அகற்றுவது அதிக செலவை ஏற்படுத்துவதால், இந்த விடயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
இறுதியில், ஒரு உள்ளூர் தோட்டக்கலை நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் கல்லறைகளை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.
அதன் ஊழியர்களின் வசதிக்காக, எந்த கல்லறை சுத்தம் செய்யப்பட்டது, எந்த கல்லறை இன்னும் சுத்தம் செய்யப்பட உள்ளது என்பதை அவர்கள் அறியும் வகையில் QR குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.