Feb 28, 2025 - 07:26 AM -
0
நேபாளத்தின் காத்மண்டு அருகே இன்று (28) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமுற்றனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
காத்மண்டுவிலிருந்து 65 கிலோமீற்றர் கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடாரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு ரிச்டர் அளவுகோலில் 6.1 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மிகவும் சுறுசுறுப்பான டெக்டோனிக் மண்டலங்களில் ஒன்றில் அமைந்துள்ளது. இதனால் அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டரில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பத்து இலட்சத்திற்கும் அதிகமான கட்டமைப்புகளை சேதப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.