Mar 2, 2025 - 06:39 PM -
0
நுவரெலியா மாவட்டத்தின் ஹிங்குரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோணப்பிட்டிய அலகலை பகுதி மக்கள் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதிலும், அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதி மக்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமது தோட்டத்தில் எவ்விதமான அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளவில்லை என கவலை வௌியிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையின் காரணமாக இப்பகுதி மண்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அலகலை தோட்டத்தில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 400இற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த தோட்டத்திற்குச் செல்வதற்கு 3 வீதிகள் இருந்த போதிலும் கடும் மழையின் காரணமாக இரு வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவசர நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கும் தோட்ட மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.
தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக தோட்டத்தில் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என கவலை வௌியிட்டுள்ளனர்.
தொழிலுக்குச் செல்வோர், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
--