Mar 3, 2025 - 01:58 PM -
0
டிராகன் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும் படைத்திராத மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருவதோடு ரிலீஸ் ஆன 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.
டிராகன் படத்தில் வருவது போல் பள்ளியில் படிப்பில் செம கில்லாடியாக இருந்து வந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் 12ம் வகுப்பில் 1200க்கு 1163 மதிப்பெண் பெற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மெரிட்டில் சேர்ந்து இன்ஜினியரிங் படித்துள்ளார்.
அவர் படித்த கல்லூரியில் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடக்குமாம், அதனால் போகப்போக படிப்பின் மீதான ஆர்வம் போய் சினிமா மீது பிரதீப்புக்கு மோகம் வந்துவிட்டது. அதனால் காலேஜ் படிக்கும் போதே குறும்படங்கள் எடுத்து வந்தார் பிரதீப்.
இவர் இயக்கிய குறும்படங்களை யூடியூப்பில் வெளியிட்டதால் அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பிரதீப் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்த பலரும் அதில் ஹீரோவாக நடித்தவரை பாராட்டி இருக்கிறார்கள்.
ஆனால் அப்படத்தை இயக்கிய தனக்கு பாராட்டு கிடைக்காததால், ஹீரோ ஆனால் பெயரும் புகழும் கிடைக்கும் என்பதை உணர்ந்து தானும் ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்.
முதலில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்க கோமாளி படத்தை இயக்கிய பிரதீப். அப்படத்தின் வெற்றிக்கு பின் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.
அந்த வகையில் அவர் தான் இயக்கி பேமஸ் ஆன ஆப் லாக் என்கிற குறும்படத்தை லவ் டுடே என்கிற பெயரில் முழு நீள படமாக எடுத்தார்.
அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு திரைக்கு வந்த லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடியது. வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் காட்டியது.
லவ் டுடே வெற்றிக்கு பின் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்த பிரதீப்புக்கு, டிராகன் பட வாய்ப்பு வந்தது. இப்படத்தையும் ஏஜிஎஸ் தான் தயாரித்தது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.
இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரிலீஸ் ஆன 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும் படைத்திராத சாதனையை படைத்துள்ளார் பிரதீப்.
அதன்படி அவர் இதுவரை நடித்த 2 படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு நடிகரும் இப்படி ஒரு மகத்தான சாதனையை படைத்ததில்லை. இதன்மூலம் ரெக்கார்டு மேக்கராக மாறி இருக்கிறார் பிரதீப்.