Mar 3, 2025 - 04:40 PM -
0
செம்பியன்ஸ் கிண்ண தொடரின் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் கடைசி லீக் போட்டியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்று (02) துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
250 ஓட்டங்கள் இலக்காக வைத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியில், தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன.
ஆனால் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கேன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார்.
ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும், கேன் வில்லியம்சனின் நிதானமான ஆட்டம் மட்டும் நியூசிலாந்து அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது.
கேன் வில்லியம்சன் 120 பந்துகளில் 81 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் படேல் வீசிய பந்தில் கிரீசை விட்டு வெளியே வந்து விளையாட முயன்ற போது, அந்த பந்தை அவர் தவறவிட்டதால், கே.எல்.ராகுல் ஸ்டம்பிங் செய்தார்.
இவரது விக்கெட்டும் பறிபோனதால், நியூசிலாந்து நம்பிக்கை இழந்தது. இந்திய அணிக்கும் ஓரளவு வெற்றி உறுதியானது.
கேன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தியதால் இந்திய அணி வீரர்களும் பெருமூச்சு விட்டனர்.
இதைத்தொடர்ந்து நட்சத்திர வீரரான விராட் கோலியும் தனது நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில், வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்திய அக்சர் படேலின் காலை தொட்டு விளையாட்டாக வணங்கச் சென்றார்.
உடனே அக்சர் படேலும் சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூசிலாந்து உடனான போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, நாளை இந்திய அணி அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. செம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.