Mar 5, 2025 - 07:17 PM -
0
பிரபல தமிழ் பட நடிகை அஸ்வினி நம்பியார் தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறை குறித்தும், அதனால் தனக்கு என்ன நேர்ந்தது துயரம் குறித்தும் ஒரு பேட்டியில் வௌிப்படுத்தியுள்ளார்.
1991ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து, 93ல் வெளியான கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர், அஸ்வினி நம்பியார்.
இவருக்கு ருத்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. சில படங்களில் மட்டும் தலை காட்டிய இவரை அதன் பிறகு வேறு எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை.
காலங்கள் மாற-காட்சிகள் மாற ரசிகர்கள் இவரை மறந்து போய்விட்டனர். ஆனால், இவரது சமீபத்திய நேர்காணல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வினி, தனது நேர்காணலில் தான் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் பிரபலமானதாக பேசியிருக்கிறார். அதற்கு பிறகு தனக்கு சில ஹிட்டான படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அதனுடன் சேர்த்து பல கசப்பான சம்பவங்களும் நடைப்பெற்றதாக பேசினார்.
அஸ்வினி, தான் எப்போது ஷூட்டிங்கிற்கு சென்றாலும் தனது தாயுடன்தான் செல்வாராம். ஒருமுறை, அவரது தாயால் இவருடன் ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் போயுள்ளது. இதனால், தனது மேக்-அப் ஆர்டிஸ்டுடன் மட்டும் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது, இவர் தனியாக இருந்த சமயத்தில் இயக்குநர் ஒருவர் இவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியிருக்கிறார். இப்போது கூட இதை வெளியில் சொல்ல தனக்கு பயமாக இருப்பதாக அவர் பேசியிருக்கிறார்.
இந்த சம்பவம் நடக்கும் போது, தான் டீன்-ஏஜில் இருந்ததாகவும் அப்போது எது சரி-எது தவறு என்பது தனக்கு புரியாமல் போனதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த பிரச்சனை தனது மண்டையில் ஓடிக்கொண்டே இருந்ததாகவும், ஒரு வேளை தான் செய்ததுதான் தவறோ என்று தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் கூறியிருக்கிறார்.
டைரக்டர் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட போது தான் மறுப்பு சொல்லியிருக்க வேண்டுமோ? அல்லது ஒருவேளை தான் தனியாக வந்திருக்க கூடாதோ? என்று மனக்குழப்பத்தில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூட அவர் கூறவில்லையாம். இதனால் ஒருமுறை தூக்க மாத்திரைகளை நிறைய சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
அப்போது தனது தாய் இது குறித்து விசாரித்ததாகவும் அப்போதுதான் அவரிடம் உண்மையை கூறியதாகவும் பேசியிருக்கிறார்.
இதைக்கேட்ட அவரது தாய், “இதில் உன் தவறு எதுவும் இல்லை” என்று கூறி புரிய வைத்திருக்கிறார். இதன் பிறகு, சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார்.