Mar 10, 2025 - 06:21 AM -
0
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுதாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 251 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து கிண்ணத்தை தட்டிச்சென்றது.
அணித்தலைவர் ரோஹித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ஓட்டங்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணித்தலைவர் ரோஹித் தெரிவித்ததாவது,
எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது.
எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும்.
தொடர் முழுவதும் உண்மையில் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடினோம். நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர்.
நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சிக்கும்போது அணியின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை. அணியினர் என்னுடன் இருந்தனர். நான் மனதளவில் தெளிவாக இருந்தேன் என்பதே முக்கியம் வாய்ந்த விடயம்.
எதிர்கால திட்டங்கள் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும். நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.