Mar 18, 2025 - 11:13 AM -
0
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'.
மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். 'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தில் பிருத்விராஜ் இராணுவ ஜெனரலாக நடித்துள்ளார். மேலும் இப்படம், எதிர்வரும் 27ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'எம்புரான்' பட வெளியாவதையொட்டி நடிகர் ரஜினிகாந்தை இயக்குனரும், நடிகருமான பிருத்விராஜ் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
'எம்புரான்' படத்தின் டிரெய்லரை முதலில் பார்த்த நபர் நீங்கள்தான் ரஜினி சார். அதை பார்த்த பிறகு நீங்கள் கூறிய வார்த்தைகள் என் வாழ்வில் எப்போதும் நினைவுகூரத்தக்கது. அது எனக்கு மிகப்பெரிய விஷயம். எப்போதும் உங்களின் ரசிகனாக! என்று கூறியுள்ளார்.