Mar 21, 2025 - 10:31 AM -
0
தளபதி விஜய்யின் 69 ஆவது படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், மமிதா பைஹு, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இது அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பேட்டா கொடுக்க முடியாததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான் இந்தியா படங்களை தயாரிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக கேவிஎன் நிறுவனம் இருந்தும் அவர்களால் சம்பள பாக்கி கொடுக்க முடியவில்லையா என்கிற கேள்வி எழுந்த நிலையில், அங்கு தான் ஒரு ட்விஸ்ட் நடந்திருக்கிறது.
அண்மையில் இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடந்ததாம். அதனால் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் ஃபிரீஸ் செய்யப்பட்டதாகவும், அதனால் சம்பள பாக்கி கொடுக்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் காரணமாகவே தற்போது ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தால் நடிகர் விஜய்யும் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜன நாயகன் படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும்.
இப்படத்தோடு சினிமாவை விட்டு விலக உள்ளார் விஜய். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு 275 கோடி ரூபா சம்பளமும் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார் விஜய்.