Mar 21, 2025 - 10:54 AM -
0
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காகவும், அவற்றில் முதலீடு செய்ய மக்களைத் தூண்டியதற்காகவும் திரைப்பட நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பலர் மீதும் தெலங்கானா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் தெலங்கானாவில், சூதாட்டத்தால் ஏற்படும் நிதி இழப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், 2017 முதல் ஆன்லைன் சூதாட்டம் சட்டவிரோதமானதாக உள்ளது.
இதுகுறித்துப் பேசிய சைபராபாத் காவல் ஆணையர் அவினாஷ் மொஹந்தி,
இந்த செயலிகள் எவ்வாறு செயல்படுகின்றன, நடிகர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களின் பங்கு என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவர்களை அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது என தெரிவித்தார்.
'ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மக்களைக் கவர்ந்திழுப்பதற்காகத் தொடர்ந்து பிரபலங்கள் மூலமாக விளம்பரம் செய்வதாக பனீந்தர் ஷர்மா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,'இதற்கு பதிலளித்துள்ள நடிகர் ராணா, ஒரு ஆன்லைன் கேமிங் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் 2017 இல் முடிவடைந்ததாகத் தெரிவித்துள்ளார். அதேபோல நடிகர் பிரகாஷ் ராஜும், 'பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆன்லைன் கேமிங் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.