Mar 24, 2025 - 12:21 PM -
0
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் (CISF) இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் நோக்கில்,அவர்கள் ஒரு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர்.
இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட CISF வீரர்கள் மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டின் கடைசி பகுதியில் உள்ள கன்னியாகுமரி வரை சுமார் 7000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார்கள், தொடர்ந்து 25 நாட்கள் பயணித்து 11 மாநிலங்களை கடந்து பயங்கரவாதத்தைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த பேரணியின் முக்கியத்துவத்தை விளக்கி,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியது “நம்ம நாட்டின் நிம்மதி மற்றும் மக்களின் பாதுகாப்பை கெடுக்க பயங்கரவாதிகள் கடலோர வழியாக நாட்டுக்குள் ஊடுருவுவதை நாம் முன்கூட்டியே தடுப்பது மிக முக்கியம்,கடலோர மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாடினால்,அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 100க்கும் மேற்பட்ட CISF வீரர்கள் மேற்கு வங்காளத்திலிருந்து கன்னியாகுமரி வரை 7,000 கி.மீ தூரம் சைக்கிள் பேரணியாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்,அவர்கள் உங்கள் பகுதியை வந்தடைந்தால்,அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுங்கள் முடிந்தால்,அவர்களுடன் சிறிது தூரம் சென்று ஆதரவை வழங்கவும்” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் மட்டுமின்றி நடிகர்கள் அமீர்கான்,மாதவன்,கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி,ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இந்த பேரணிக்கு ஆதரவளித்து வீரர்களை ஊக்குவிக்கின்றனர்.