Mar 27, 2025 - 01:51 PM -
0
கடற்றொழிலாளர்களை பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, கடற்றொழிலை நவீனமயப்படுத்தி கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் முதற்கட்டமாக நேற்று (26) அம்பாறை மாவட்டத்துக்கு சென்றிருந்தார்.
மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
காரைதீவு பகுதியிலுள்ள மீனவ அமைப்புகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காரைதீவு மீனவ அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிறைவேற்றுவதற்கு தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
கடற்றொழிலை நவீனமயமாக்கும் திட்டம் பற்றி அனைத்து மீனவர்களுக்கும் தெளிவுபடுத்தப்படும் எனவும் கூறினார்.
தமது பகுதிக்கு நேரில் வருகை தந்து பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சருக்கு நன்றிகளை மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, அமைப்பாளர் உள்ளிட்டோரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

