Mar 28, 2025 - 02:00 PM -
0
எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை ஒன்று இன்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கல்முனை பேருந்து நிலையம், பொது நூலகம், அம்மன் கோவில் வீதி, தாளவட்டுவான் சந்தி, நற்பிட்டிமுனை புறநகர் பகுதி, கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை, வங்கிகள், தனியார் நிறுவனங்கள், கல்முனை மாநகர பகுதிகள், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பகுதி, கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி ஆகியவற்றில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உட்பட பாதசாரிகளுக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் படிக்கட்டுக்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தவிர கடந்த காலங்களில் பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலையை விட்டு வீடு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனால் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்தை சீர்செய்வதற்கு அண்மைக்காலமாக கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
--