Mar 29, 2025 - 10:41 AM -
0
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2022ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார்.
இந்த நிலையில் எலான் மஸ்க் தனது X என்னும் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக தன்னுடைய சொந்த ஏஐ நிறுவனமான xAIஇற்கு விற்றுள்ளார். இதன் மூலம் சமூக ஊடக தளமான X இனி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI உடன் பின்னி பிணைந்து இயங்கப் போகிறது.
எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு சமூக ஊடக தளமான X-ஐ மாற்றும் பரிவர்த்தனையை முழுமையாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த கையகப்படுத்தும் திட்டத்தில் பண பரிமாற்றமாக இல்லாமல் முழுமையாகப் பங்கு பரிமாற்றமாக நிறுவனம் கைமாற்றப்பட்டு உள்ளது.
2022ஆம் ஆண்டு எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு வாங்கப்பட்ட ட்விட்டர் தற்போது 33 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் xAI நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. X மற்றும் xAI இரண்டும் தனியார் நிறுவனங்களாக இருப்பதால் பங்குச்சந்தைக்கும், பொது மக்களுக்கு நிதி நிலவரத்தையும், மதிப்பீட்டின் கணக்கீட்டையும் வெளியிட வேண்டியதில்லை.
எலான் மஸ்க் இது குறித்து தனது X பதிவில் சில முக்கியமான தகவலை வெளியிட்டு உள்ளார், அதில் xAI இன் மேம்பட்ட AI திறன் மற்றும் X தளம் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள ரீச் உடன் இணைப்பதன் மூலம் சிறப்பான, ஆற்றல் மிகுந்த சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் என்று குறிப்பிட்டு உள்ளார்.