Mar 29, 2025 - 03:32 PM -
0
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் கடந்த 22ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா பொலிசார் வேண்டுகோள் விடுத்தனர்.
ஏப்ரல் 6ஆம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற இருந்தது.
அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்தது.
இதனால் கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் பொலிசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே தினத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு பொலிஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 6ஆம் திகதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு திகதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா பொலிசார் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் , இந்த ஆட்டத்துக்கான திகதி மட்டும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி கொல்கத்தா - லக்னோ இடையிலான மோதல் ஏப்ரல் 8 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு அதே கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.