Mar 31, 2025 - 06:51 PM -
0
மியன்மாருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் அவசர பதிலளிப்பு குழுக்களை அனுப்புவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும், தேடுதல் மற்றும் மீட்பு குழுக்களையும் ஒருங்கிணைப்பதற்காக தேவையான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று, இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இன்று (31) அதன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், ஏனைய பங்குதாரர் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு பொறிமுறையை உருவாக்குவது மற்றும் அவசர பதிலளிப்பு குழுக்களை மியன்மாருக்கு விரைவாக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.