செய்திகள்
இந்தியப் பிரதமரிடம் யாழ் மீனவர்கள் பகிரங்க கோரிக்கை

Apr 2, 2025 - 10:44 PM -

0

இந்தியப் பிரதமரிடம் யாழ் மீனவர்கள் பகிரங்க கோரிக்கை

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக்கோரிக்கையை மீனவர்கள் விடுத்துள்ளனர். 

இதற்கமைய பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் இன்றையதினம் (02) கையளித்துள்ளனர். 

இதன் பின்னர் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். 

இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக நாங்கள் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம். ஆனால் இலங்கை, இந்திய அரசுகள் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்காத நிலைமையே காணப்படுகிறது. 

எனவே இலங்கைக்கு வருகின்ற இந்தியப் பிரதமர், இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்திற்கு சரியான தீர்வொன்றை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம். 

அதாவது எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் அத்துமீறி வரக்கூடாது. அதனையும் மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அத்தோடு இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழத்துள்ள எமது மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளோம். 

மேலும் தொடர்ந்தும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பி முன்னரைப் போன்று போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05