Apr 4, 2025 - 08:00 AM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு (03) சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் 60 ஓட்டங்களையும், ரகுவன்ஷி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ், மொஸமட் ஷமி, அன்சாரி, ஹர்ஷல் பட்டேல் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிக்கொண்டது.
சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்டத்தில் க்ளாசன் 33 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பாக வைபவ் அரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.