Apr 14, 2025 - 11:28 AM -
0
இந்தியாவின் கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா (48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி (27) என்ற மகளும் அகிலேஷ் (24) என்ற மகனும் இருந்தனர்.
சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். மகள் அஞ்சலி வெளிநாட்டில் தாதியராக பணிப்புரிந்து வந்தார்.
இவர் விடுமுறைக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அஞ்சலி தனது தந்தையின் கடைக்கு அருகில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த ஒருவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். 12 ஆம் திகதி மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரமடைந்தனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்து பெற்றோர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த தாய் ஸ்ரீஜா, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு பெற்றோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தனர். குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தீயணைப்பு துறைக்கும் பொலிஸிற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து காயங்களுடன் கிடந்த 4 போரையும் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீஜா பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியபாலனும், அஞ்சலியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எருமேலி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.