Apr 17, 2025 - 08:04 AM -
0
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் யோகட் ஆகியவை வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பால் மற்றும் யோகட் மீதான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பால் குறைந்தபட்சம் 50 சதவீதம் அதில் அடங்கியிருக்க வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையொப்பமிட்டு அதற்கான ஒப்புதலை வழங்கினார்.
அதன் அடிப்படையில் குறித்த சட்டம் அன்றைய தினம் முதல் அமுலுக்கு வருவதால் பல வரி திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பால் மற்றும் யோகட் தவிர, மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட நாப்தா மீதான வெட் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய வரி திருத்தத்திற்கு அமைவாக, வெளிநாட்டினர் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலத்திரனியல் தளங்கள் ஊடாக இலங்கையிலுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளுக்கு VAT அமுலுக்கு வரும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

