வடக்கு
ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா?

Apr 18, 2025 - 05:56 PM -

0

ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா?

தையிட்டி விகாரை விவகாரத்தில் அது கட்டப்பட்ட விதம் சட்டவிரோதம் தான் என்ற நிலைப்பாட்டில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியிடமும் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தையிடி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தவர்கள் இந்த NPP என்ற மக்கள் விடுதலை முன்னணியினர் தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளர் . 

யாழ்ப்பாணத்தில் நேற்று (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் இவ்வாறு கூறியிருந்ததுடன் அது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அநுர அரசே தையிடி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தனர். 

இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர். 

ஆனால் இன்று குட்டிக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர். 

இனவாதத்தை தூண்டும் இந்த தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காட்டுகின்றனர். 

முன்னைய அரச தலைவரான கோட்டாவுக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது அவரது உண்மை முகத்தைக் காட்ட. ஆனால் இந்த ஜேவிபியின் உண்மையான முகம் 6 மாதங்களுக்கள் வெளிப்பட்டுவிட்டது. 

குறிப்பாக முன்னவர்கள் இனவாதிகள். அதை அவர்கள் வெளிப்படையாகவே காட்டினர். ஆனால் இவர்கள் அதைவிட மோசமனவர்கள். மக்களை நம்பவைத்து தம்வசப்படுத்தி கழுத்தறுக்க முயற்சிக்கின்றனர். 

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் தமிழ் மக்களின் இருப்பை சூட்சகமாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாகவே முன்னெடுப்பதாக உள்ளது. 

இது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் போக்காகவே இருக்கின்றது. 

மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் அந்த வாக்குறுதிகளுள் ஒன்றைக்கூட நிறைவேற்றாது மீண்டும் புதிய பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றது. இது தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் முயற்சியாக இருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் இதன் வெளிப்பாட்டை உள்ளூராட்சித் தேர்தலிலும் வெளிப்படுத்த வேண்டும். 

அந்தவகையில் தமக்கு வாக்களித்தால்தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்தானது ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா? என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05