Apr 26, 2025 - 11:56 AM -
0
'காவல்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாகேந்திரன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரையுலகை உலுக்கும் வகையில், நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த மரணங்கள் பிரபலங்களையும், ரசிகர்களையும், தொடர்ந்து சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகரும் - இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய இழப்பில் இருந்தே இன்னும் பலர் மீண்டு வராத நிலையில், மற்றொரு இயக்குனரின் மரணம் திரையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் நாகேந்திரன். 2015 ஆம் ஆண்டு, உண்மை கதையை மையமாக வைத்து, ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான 'காவல்' திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை புன்னகை பூ கீதா மற்றும் பிலிப்ஸ் ஷீத்தல் ஆகியோர் ஆகியோர் தயாரித்திருந்தனர்.
விமல் கதாநாயகனாக நடிக்க, சமுத்திரகனி மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். மேலும் எம் எஸ் பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, அஸ்வின் ராஜா, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற பின்னரும், வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதன் பின்னர் திரைப்படம் இயக்கவில்லை என்றாலும், பல படங்களில் நாகேந்திரன் பிற பணிகளை செய்து வந்தார். இந்நிலையில், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.