Apr 29, 2025 - 09:57 AM -
0
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த புனித பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறினார். ரோமில் உள்ள புனித மரியாள் மேஜியோரே பெசிலிக்காவில் அவரது திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசர் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வத்திக்கான் இறங்கி இருக்கிறது.
அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய பாப்பரசர்களை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) மே மாதம் 7ஆம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய பாப்பரசராக தேர்வு செய்வார்கள்.

