Apr 29, 2025 - 05:31 PM -
0
கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.
மேலும், அவரது புதிய ஜனநாயகக் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்த நிலையில், கட்சிக்கான அந்தஸ்து பறிபோனது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார்.
கனடா பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், இந்திய நேரப்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில், ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீண்டும் அக்கட்சியின் தலைவர் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள புதிய ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பர்னபி சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், வெறும் 9,100 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து தோல்வியை தழுவியுள்ளார்.
காலிஸ்தான் தலைவராக முன்னிறுத்தப்பட்ட ஜக்மீத் சிங், தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்திருப்பது புதிய ஜனநாயகக் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள 343 இடங்களில் குறைந்தது 12 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே கட்சி அந்தஸ்து கிடைக்கும். இதனால், கட்சி அந்தஸ்தும் பறிபோகியுள்ளது. கடந்த தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்ற புதிய ஜனநாயகக் கட்சி, ஆளும் லிபரல் கட்சிக்கு ஆதரவளித்திருந்தது.
இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
“புதிய ஜனநாயகக் கட்சியை வழிநடத்தியதும் பர்னபி சென்ட்ரல் தொகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதும் என் வாழ்க்கையின் மிகப் பெரிய மரியாதையாக கருதுகிறேன்.
பிரதமர் மார்க் கார்னிக்கு வாழ்த்துகள். இந்த இரவு புதிய ஜனநாயகக் கட்சியினருக்கும் ஏமாற்றமளித்திருக்கும் என்பதை நான் அறிவேன்.
அதிக இடங்களை வெல்ல முடியாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கட்சி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாம் எப்போதும் பயத்தைவிட நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்போம் என்பது எனக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

