May 1, 2025 - 03:02 PM -
0
டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று (01) இடம்பெற்றது.
காக்காக்கடைச் சந்தியிலிருந்து கூட்டுறவு மண்டபம் வரை நடைபவனி மற்றும் அமைதிப் பேரணி இடம்பெற்றது. தொடர்ந்து, மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, பென்களிற்கு சம ஊதியம், சம உரிமை, தொழில் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
1984 இல் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான டாபிந்து கூட்டமைப்பானது, கட்டுநாயக்க மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயம் (FTZ) மற்றும் வடக்கில் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை மையமாகக்கொண்டு பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் நோக்காக கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேதின நிகழ்வில் கலந்து கொண்ட டாபிந்து கூட்டமைப்பின் செயலாளர் P K சமிலா துசாரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பார் ஐ.சிறிகாந்தி ஆகியோர் குறிப்பிடுகையில்,
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வந்த பின்னர் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தமது நாட்டின் இறக்குமதி வரியை அறிவித்தமையால் எமது நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
எமது நாட்டில் ஆடை ஏற்றுமதிக்கு பெண்கள் கடுமையாக உழைக்கின்றனர். அந்த ஏற்றுமதி பாதிப்பினால் எமது நாட்டின் பொருளாதாரத்துக்காக உழைக்கும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. தொழிற்சாலையில் பெண்களிற்கு வேலைச்சுமை அதிகரிக்கின்றது. ஆனால் அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை.
இந்த ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பிலும், பெண்களின் தொழில் முயற்சி மற்றும் பொருளாதார பாதிப்பு தொடர்பிலும் எமது அரசாங்கம் அமெரிக்க அரசுடன் பேச வேண்டும்.
அத்துடன், ஆண், பெண் பாகுபாடின்றிய ஊதியம் வழங்கப்படுவதுடன், தொழில் இடங்களில் சமத்துவம் பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
--