May 4, 2025 - 11:35 AM -
0
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மீண்டும் மக்கள் செயல் கட்சி (PAP பிஏபி) 65.57% வாக்குகளுடன் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் பாராளுமன்ற தேர்தல் மே 3ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 97 இடங்களில் மக்கள் செயல் கட்சி 87 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றது. கடந்த தேர்தலைப் போலவே பாட்டாளிகள் கட்சி, 10 இடங்களைக் கைப்பற்றியது.
இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என பிரதமர் லோரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைவர் ஸ்பென்சர் இங் கூறுகையில், எதிர்க்கட்சிகளிடம் போதுமான ஒற்றுமை இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி தர்மன், ஒவ்வொரு வாக்காளரும் யாருக்காக வாக்களித்திருந்தாலும் சிறந்த எதிர்காலம் வேண்டும் என்பதில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். பிற நாடுகளைப் போல அரசியலில் நம்பிக்கை இழப்பு, பிளவுவாத நிலை எதுவும் இல்லை. இதே நிலைமை வெகுகாலம் நீடிக்க வேண்டும். இந்தப் பொதுத் தேர்தலில் முழு முயற்சியுடன் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.