செய்திகள்
பிரதமர் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இடையே சந்திப்பு

May 4, 2025 - 03:57 PM -

0

பிரதமர் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இடையே சந்திப்பு

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜென் நகாதானிக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (4) அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

நீண்டகால இருதரப்பு நட்புறவு அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. ஜப்பான் அரசாங்கத்தின் சார்பாக பிரதமருக்கு அமைச்சர் ஜென் நகாதானி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கூட்டு முயற்சிகளுக்கு ஜப்பானின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். 

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய இணைப்பில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். 

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம், வளர்ச்சி கூட்டாண்மைகள் மூலம் ஜப்பான் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் அமரசூரிய நன்றி தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். 

இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்களிப்பை காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவில் உள்ள வாய்ப்புகளை இந்த சந்திப்பு மேலும் ஆராய்ந்தது, இரு தரப்பினரும் ஐந்து முக்கிய துறைகளில் ஈடுபாட்டை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டனர். 

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இஸொமாடா அகியோ மற்றும் இரு அரசாங்கங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05