May 5, 2025 - 06:47 PM -
0
மன்னார் மாவட்டத்தில் நாளை (6) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (5) மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 91,373 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்காக மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்கள், மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்கள், நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்கள், முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்கள், மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்கள் என கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக மொத்தம் 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் மன்னார் நகர சபைக்கு 15 உறுப்பினர்கள், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்கள், நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்கள், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்கள், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்கள் என மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று (5) மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் நீதியான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் நாளை (6) காலையில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஊடகச் சந்திப்பில் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கே. முகுந்தனும் கலந்துகொண்டார்.
--