May 16, 2025 - 09:10 AM -
0
அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (15) பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு உரமானியம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இன்று எவ்விதமான மானியங்களும் வழங்கப்படுவதில்லை.
அத்துடன் வழங்கப்படும் விவசாய உள்ளீடுகள் கிருமிநாசினிகள் தரமற்றவை என்றும் இதனால் தமது உற்பத்திகளில் பாரிய மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக வெங்காய உற்பத்தி, உருளைக்கிழங்கு உற்பத்திகளன் போது விளைச்சலைப் பெறுகின்ற காலத்தில் அரசாங்கம் தடைகளின்றி வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் , உருளைக்கிழங்கு போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. எனவே, எமது உற்பத்திக்கு கேள்விகளற்றுப் போய் விடுகிறது. எனவே இவ் விடயங்களை பாராளுமன்றில் எடுத்துரைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த சிவஞானம் சிறிதரன் விவசாயிகளின் உற்பத்திகள் பாதிப்படைவது போல் கடல்வளங்களும் வெளிநாட்டு இந்திய மீனவர்களினால் அழிக்கப்படுகிறது. இங்கு உங்களது உற்பத்திகளுக்கு கேள்விகளற்றுப் போகிறது. வெளிநாட்டு உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்திகள் தேங்கி அழிவடைந்து செல்கிறது.
குறித்த விடயங்கள் பற்றி நிச்சயமாக பாராளுமன்றில் எடுத்துரைப்பேன். இவ்வாறு தான் கிளிநொச்சி விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் விவசாய அமைச்சரிடம் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இருவாரங்களில் பதில் அளிப்பதாக சபையில் வைத்துக் கூறி இன்று இரண்டு மாதங்களைக் கடந்து விட்டது, ஆனால் இது வரை அமைச்சர் பதில் தரவேயில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.
--