May 21, 2025 - 11:40 PM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று (21) இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 63ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும் திலக் வர்மா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 181 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
டெல்லி கெப்பிடல்ஸ் அணி சார்பாக சமீர் ரிஸ்வி 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் மிச்சல் சன்டர் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் ஊடாக மும்பை இந்தியன் அணி 16 புள்ளிகளைப் பெற்று நான்காவது அணியாக ப்ளே-ஒப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

