May 23, 2025 - 03:29 PM -
0
இலங்கையில் செவிலியர் சேவைக்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (24) நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் செவிலியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும், இந்த நிகழ்ச்சியுடன் செவிலியர் சேவையில் சிறப்பு தரத்தில் உள்ள 79 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இதன்படி, நாளை காலை 9:30 மணிக்கு அலறி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நாலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

